நேசம் கொண்டவளே!..

கண்டும் காணாமல்
கண்ணால் செய்தி சொன்ன
கல்லூரி காலங்களில்...
உன் தோழிகளிடம்
என் நண்பனென
அறிமுகப்படுத்திய நேரங்கள்...
வெளிப்படையாக சொல்லாமல்
என் காதல் கவிதைகளை
என்னைவிட அதிகமாய் நேசித்து
எல்லாரிடமும் அதன்
பொருளை விவரித்த
பொன்னான தருணங்கள்...
யாரும் அறியாமல்
உன்னோடு
கால் வலிக்க நடந்து
கடையில் வாங்கிய பொருட்களின்
ரசிதில் நம்மிருவரது பெயரையும்
ஒரு சேர பார்த்து
ரசித்த வினாடிகள்....
உன்னோடு அருந்தும் போது
மேலும் சுவைத்திட்ட
பழ ரசங்கள், உணவு வகைகள்...
நேரம் தெரியாமல்
சமூகம் பற்றியும்
காதல் பற்றியும்
உன்னோடு பேசிய
உன்னதமான மணித்துளிகள்....
உன்னோடு முதன் முதலாக
என் இருசக்கர வாகனத்தில்
பயணித்த போது காற்றினை விட
லேசாக உணர்ந்த நிமிடங்கள்..
இருவரும் சேர்ந்து
இரு கால்களையும்
ஒரு சேர வைத்து
ஒன்றாக சென்ற கோவில்கள்....
பிரியும் நேரம் வந்தும்
உன்னை விட்டு
வீடு செல்ல மனமின்றி
உன்னருகில் நின்று
அடம்பிடித்த நாழிகைகள்...
அவ்வப்போது நமக்குள் வந்த
அர்த்தமில்லாத ஊடல்கள்...
என அத்தனை
மறக்க இயலா சம்பவங்களையும்...
மற்றவர்களும் அறிந்து கொள்ள...
மற்றற்ற மகிழ்ச்சியான முடிவெடுத்திட
நீ நேசித்த கவிதையில்
தொகுப்பாக வெளியிடுகிறேன்...
நேசம் கொண்டவளே!.. புது
சுவாசம் தந்தவளே!....
படித்தவுடன் சொல்லி அனுப்பு
ஏதேனும் விடுபட்டிருந்தால் -
நம் வாழ்வை தவிர!...

No comments: