பிறந்தநாள் வாழ்த்துகள் மகனே!

தம்பியாக செய்ய இயலாததை
தந்தையாக செய்திட
முருகனிடம் வரம் கேட்டு
மூதாதயர்கள் ஆசியோடு
அமுதாக  வந்த தவமே
ஆண்டு இரண்டு இன்று உனக்கு!..

அன்பை வளர்த்து
ஆல விழுதாக
இன் முகத்துடன்
ஈகை செய்து
உரிமையை நிலைநாட்டி
ஊரின் பெருமையை
எட்டுத்திக்கும் பறைசாற்றி
ஏற்றமுடன் வாழ்ந்து
ஐயமின்றி வழிநடத்தி
ஒட்டுமொத்த இனத்தின்
ஓங்கி ஒலிக்கும் குரலாக
ஓளவையின் தமிழாக

வள்ளுவனின் வழி நின்று
நல்லன தீயென பகுத்தாராய்ந்து
அகிலம் போற்றிட
மீண்டுமொரு சிலப்பதிகாரம்
படைத்திடும் இளங்கோவாக
நலமுடன் வளமுடன்
ஏற்றமிகு வாழ்வு வாழ்ந்திட
ஆண்டவனின் அருளாசியை வேண்டி
அன்னையும் தந்தையும் வாழ்த்துகிறோம்
சுற்றத்தோடும் நட்புகளோடும்
வாழிய  நீ பல்லாண்டு பல்லாண்டு
நலமோடு! வளமோடு!!


No comments: