ஒரு முறை

என் எண்ணங்களின் 
எழுச்சியாய்!...
என் சிந்தனைகளின் 
சிற்பமாய்!...
என் நம்பிக்கையின் 
விழுதாய்!..
என் கற்பனைகளின் 
காவியமாய்...
என் வாழ்வின் 
வெளிச்சமாய்...
என் கண்ணெதிரில் 
இருந்த உன்னை 
கவனிக்க தவறியவனின்   
கடைசி நிமிடங்களில் - அந்த 
வெட்கத்தின் நளினத்தோடு 
உன் ஒத்தை புன்னைகையோடு 
ஒரு முறை என்னை பார்த்துவிடு
முழு நிறைவோடு 
மூர்சையடைவேன்!...

இசைத்தாயே!...

மார்கழி திங்களில் வரும் 
       சங்கீத சாரலாய் என்
மனதினுள் ஒய்யாரமாக  
      சம்மணமிட்ட இசைத் தாயே!...

சங்கீத அறிவு சற்றே  
     இல்லாவனின் பாசம் 
சாகும்வரை வேண்டாமென்று 
      இரக்கமில்லாமல் போனதேன்?




தரிசிக்க வேண்டுமடி!...

வாழும் நாளெல்லாம்
வலி தருபவளே!... 
நான் 
வையகத்தை விட்டு
செல்லும் முன்... 
வாடாமலரே!.. என்
வாழ்வே!... ஒரு முறை 
எந்தன் உயிர் 
உந்தன் முகம்தனை  
தரிசிக்க வேண்டுமடி!...

வாழ்வே!...

வாழ்கையை கற்றுத்தந்தாய்! - என்
வாழ்வாக நீயே இருந்தாய்!
வாழ்வின் வேகம்  தந்தாய்! - என் 
வாழ்வின் தாரமாய் உன்னை நினைத்தால்
வரலாற்று பிழை செய்தது போல - என்னை
வழியிலேயே விட்டு சென்றதேனடி?  

வெற்றிடம்!...

நடந்து கொண்டிருக்கும் 
நிகழ் காலத்தில் 
கடந்து செல்லும் 
உன்சாயல் ஒத்த பெண்களை 
பார்க்கும் போதெல்லாம் 
என் வாழ்வில் நீ தந்த 
வெற்(றி)றிடம் - மனசுக்குள் 
வந்து செல்கிறதடி!...

வலி!...

காதலின் வலி 
காலத்தின் கட்டாயம் 
எனில் 
மொத்த ஆயுளின் நிமிடங்கள் 
அந்த வலியின் மிச்சங்கள் 


வாழ்வு

ஒவ்வொருவரும் ஏதோ
ஒரு தருணத்தில்
ஒவ்வொருவரையும் ஏமாற்றி
ஒவ்வாத ஒரு வாழ்வு
ஒவ்வொரு நாளும் வாழ்கிறோம்!...

காதலிலும் - ஒவ்வொரு
கணத்தையும்  - இதயத்தின்
காயத்தையும் -  வலியையும்
கண்ணுக்குள் வைத்து
காலத்தை கழிக்கிறோம்!...

என் காதலே!

காதலே என்றதும்  - என்
கைகளில் புகுந்து - எழுத்தாய்
வெளிப்படுவாய் - முன்னொரு காலத்தில்!...
இன்றோ - பரிதவிக்கிறேன்; காதலே!
உன்னை மட்டும் நேசித்து
என்னை நேசித்தவளை புறம்தள்ளியபோது
அவள் பட்ட வேதனை - இன்று
நான் படவேண்டுமென
என்னை விட்டு காத தூரம்
ஓடுகிறாயோ?
காதலின் வலி அதன் தோல்வியில் அல்ல
அதன் புறக்கணிப்பில் என உணர்த்துகிறாயோ
காதலே உன்னை மட்டுமே நேசித்தவன்
உன்னை மட்டுமே நேசிப்பவன்
உன்னிடம் வேண்டுகிறேன் -
வெறுத்துவிடாதே  என்னை
நீயின்றி யார் எனக்கு மருந்தாவார்?  

அம்மா...

கருவாய் சுமந்து
கண்ணாய் காத்து
சிறுவயதில் சிங்காரித்து
இளவயதில் பொறுத்து
உன் வாழ்வை தொலைத்து
என் வாழ்வையே
உன் வாழ்வாய் வாழ்ந்தவளே! ...

என் மகளை சுமக்கும் - இந்த
என் தாய்மையில் தான்
உணர்கிறேன் அம்மா...
என் மீதான...
உன் அக்கறையை...
உன் மகிழ்வுகளை...
உன் பதற்றத்தை...
உன் பாசத்தை...

 

தமிழாய் நிமிர்ந்திடு!..

முல்லை பெரியாறு என்றால் - அது
திருநெல்வேலிகாரர்களின் பிரச்னை என்றும்
பாலாறு என்றால் - அது
செங்கல்பட்டுகாரர்களின் பிரச்னை என்றும்
காவிரி என்றால் - அது
தஞ்சாவூர்காரர்களின் பிரச்னை என்றும்
அணுஉலை ஆபத்து என்றால் அது
கூடங்குளம் பிரச்னை ஆச்சே என்றும்
நச்சுப்புகை தரும் ஸ்டெர்லைட்   என்றால் - அது
தூத்துக்குடி பிரச்னை என்றும்
நம்மை சுற்றி நடக்கும் எந்த பிரச்சனையிலும்
கவலையின்றி - தன்னைப்பற்றி மட்டுமே
முன்னிறுத்தி தனிமனித வாழ்வுக்கு
பழக்கப்பட்டு போன -
இந்திய தேசத்தின் இதயங்களே!..
தேசபக்தியின் மொத்த உருவங்களே!..
என் தமிழர்களே!
உங்கள் தமிழகத்தின் நலன்
ஒவ்வொன்றாய் நசுக்கப்பட
ஒவ்வொரு உரிமையாய் பறிக்கப்பட
ஒரு நாள் உன் தனிமனித வாழ்வு
கேள்வியாக்கப்படும் போது... - நீ
தோள்  சாய கூட ஆளில்லாமல்
ஒத்தைமரமாய் நிற்க்கப்படும் சூழல் வரும்
எனவே - இன்றே
தமிழாய் நிமிர்ந்திடு!..
தமிழனாய் வாழ்ந்திடு !..

வாழ்த்து

இன்று பிறந்த நாள் காணும் என் தோழிக்கு...

சுற்றமும் நலமாய் இருக்க
பாசத்துடன் நேசம் கொள்ளும்
சிநேகிதியே - வரவிருக்கும் ஆண்டுகளில்..
நின் கனவுகளும் மெய்ப்பட
சுற்றும் இந்த உலகினை
பாவை நீயும் உன் நேசத்தோடு
சிட்டுகுருவி போல சுற்றிட
நிறைவான வாழ்வு வாழ்ந்திட வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடனும்! நலமுடனும்!
இனிய பிறந்ததின நல்வாழ்த்துக்கள்!...

பிரிந்ததேனடி...

இமயமே இதயமே என்னை பிரிந்ததேனடி
இருவரும் இணைந்தே எங்கும் சென்றதேனடி
பரிதவித்த எனக்கு பாசம் காட்டியதேனடி
பிரிவெனும்   துயரினில் என்னை தள்ளியதேனடி
ஊரெல்லாம் உன்பெயர் சொல்லி நான்
உன்மீது பைத்தியம் ஆனேனடி
உயிர் வரை உன் காதல் சொல்லி - என்
உதிரம் சிந்த செய்தது ஏனடி
பிரிவென்பது  உன் முடிவென்ற பின்னால்
பாதையில்ல பயண மொன்றில் 
பரிதவிக்கும் பயணியாகி போவேனோ? 

நம்வாழ்வு...

காற்றினில் கரையும்
கண்ணீரை போல
கனவுகளுடனே போனதடி
கண்ணே - நம்வாழ்வு!..

நினைவு

என் எண்ணத்தில் உள்ளதை
எளிதில் எழுத முடிந்தது
என்னவளாக நீ இருந்தபோது!... 

மனதினில் எழும் அலைகளை 
மடலாக கூட மாற்றமுடியவில்லை - நீ   
மாற்றானின் மனைவியான பின்பு!...   


பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

என்னுள் பாதியாக வந்தவளே!..
என் எண்ணமாகவே வாழ்பவளே!...
எனக்காக பிறந்தவளே!.. - நீ 
தமிழ் போல வாழ்க!...
தலைவர் போல வளர்க!...
என நம் உறவுகளோடும் 
நட்புகளோடும் சுற்றத்தோடும் 
வாழ்த்துகிறேனடி!.. 
வாழிய பல்லாண்டு!...     
வளமுடனும்! நலமுடனும்! 

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

ஒட்டு மொத்த குடுபத்தினரும்
ஒருசேர குழுமும் ஒருநாள்
புத்தாடை உடுத்தி - தம்வயலில்
புதிதாய் விளைந்த  அரிசியினால்
தித்திக்கும் கரும்பு துணையிருக்க
திகட்டாத வெல்லத்துடன் - கொத்து
மஞ்சளும் முந்திரியும் திராட்சையும்  
மனம் பரப்ப - விவசாயியின்
அனைத்து விளை பொருளும்
அடுப்படிக்கு வந்து சேர
குடிசை தொழிலை ஊக்குவிக்க
குழைத்த மண்கொண்டு செய்த
புதிய மண்பானையில்- மனமகிழ்ச்சியோடு
புதிதாய் பொங்கும் பொங்கல்...
சூரியனுக்கும் கால்நடைகளுக்கும்
ஊருணிக்கும் ஊருக்கும் - என
எம்தொழிலுக்கு உதவும்
எல்லாருக்கும் நன்றி சொல்லி
ஏற்றமிகு வாழ்வு வாழ்ந்திட - இனியும்
ஏமாறாமல் நம் உரிமை காத்திட
தமிழனாய் ஒன்றுபட்டு சபதமேற்று
தமிழர் திருநாளை  கொண்டாடிட
அனைவருக்கும் வாழ்த்துகள்.. 

உறவுகளின் நினைவுகள்...

எல்லா  இழப்புகளும்
எப்படியாவது நம்மை
அதன் தாக்கத்திலிருந்தும்
அந்த  நினைவுகளிலிருந்தும்
மீட்டு விடுகிறது!..

வாழ்வின் போராட்டத்தால்..
வாழவேண்டிய நிர்பந்தத்தால்..
நண்பர்களின் நேசத்தால்..
நல்லவர்களின் பாசத்தால்..
மீண்டோ; மறந்தோ போகிறோம்

எல்லோரும் ஒருமித்து
எதிர்காலத்தை நோக்கி  
நிகழ்காலத்தில் ஓடுகையில்
இறந்தகாலம் தந்த எல்லா
இழப்புகளும் மறந்துவிடுகிறது..

வாழ்வுதந்த தந்தை..
வழிநடத்திய அண்ணன்..
அரவணைத்த தாத்தாபாட்டி - என
அனைத்து உறவுகளின்
நினைவுகள் கூட
நிழல்படத்துடனே நின்றுவிடுகின்றன..

எங்கள் தேசம்...

பல அடுக்கு மாடி
கட்டிடங்கள்...
பறந்து விரிந்த பசுமையான
தரைத்தளங்கள்....
குப்பை இல்லா தூய்மையான
சாலைகள்...
சாக்கடை இல்லாத சுத்தமான
வீதிகள்...
குளு குளு வசதியுடன்
பேருந்துகள்...
குறித்த நேரத்தில் வரும்
ரயில்கள்...
நடந்து செல்ல அனைத்து நிலைகளிலும்
நடைபாதைகள்...
விளையாட குறிப்பிட்ட தூரங்களில்
இடவசதி...
வீதிக்கு ஒரு  பூங்கா...
வீட்டுக்கு அனுப்ப பணம்...
என எல்லா வசதிகளும்
இந்த அந்நிய தேசத்தில்
இருந்தாலும்....
அன்பாய் நேசம் விசாரிக்க
அண்டை வீட்டில் ஆளில்லை!...
அக்கறையாய் திட்ட  எந்த
பெரியவர்களும் இல்லை!...
உறவுகளை வீட்டுக்கு கூப்பிட
உரிமை இல்லை!...
தடுமாறும்போது தூக்கி  நிறுத்தும்
நண்பர்கள் இல்லை!...
அரவணைக்கும் சுற்றம் இல்லை!..
அன்பு கொள்ள பெற்றோர் இல்லை!...
குப்பையாய் இருந்தாலும்...
சாக்கடையில் நடந்தாலும்
எங்கள் தேசத்துக்கு நிகராகுமா
இந்த அந்நிய தேசம்!...  

தலைவன்...

மன்னராட்சியில் அன்று
மன்னன்  என்பவன்
தன்னலம் கருதாமல்
தன் மக்கள் நலம்
பேணியவன்!...

குடியாட்சியில் இன்று
தலைவன் என
முன்னிருத்த படுபவர்கள்
தன் குடும்ப நலமே
முக்கியமென நினைப்பவர்கள்!...

 அத்தி பூத்தார்ப்போல
அவதரிக்கும் உண்மை தலைவனை..
மக்களுக்குக்காக தன் கட்சி
மரியாதைகளை உதறித்தள்ளும்
மனிதனை  - இக்காலம்
நமக்கு தருகிறது - அவர்களை
நாம் தான் இனம் கண்டு
நாளைய நாயகனாய்
நம் இனம் வளர வாழ
நாம் போற்றி வரவேற்க வேண்டும்!..  

என் கிராமம்...

( இது எனது வலைதளத்தில் 150 வது படைப்பு)


ஊருக்கு மத்தியில் தவழும்
ராஜாமட கால்வாயின் உதவியால்
முப்போகம் விளையும் விவசாயம்
ஊரின் முகப்பிலிருந்து முடிவுவரை
பச்சை தரை விரிப்பாக
செழித்து விரியும் இயற்கை!..
ஊருக்கு நடுவில் ஒய்யாரமாய்
மேனிலை பள்ளி - அடுத்து
கூட்டுறவு வங்கியும்,
நுகர் பொருள் வங்கியும்..
கபடி, வாலி பால், கிரிக்கெட் என
எல்லா விளையாட்டிலும் பரிசினை
பெற்று வரும் மாணவ, வாலிபர்கள்..
மாவட்ட ஆட்சியர் முதல் கொண்டு
கடை நிலை ஊழியர் வரை
எல்லா அரசு பதவிகளிலும்...
கிளை செயலரில்  ஆரம்பித்து
மாவட்ட செயலர், சட்ட மன்ற உறுப்பினர் என
அரசியலின் அனைத்து பதவிகளிலும்...
திருப்பூரில் தொழிலாளி முதல்
அமெரிக்காவில் விஞ்ஞானி வரை...
என எல்லா நிலைகளில் எம்மை
வளர்த்து விட்ட
எம் மண்ணை,
நம் கிராமத்தை,
நாமெல்லாம் மறந்தது சரியா
என் கிராமத்து உறவுகளே!...