வாழ்வின் தொகுப்பு...

கண்டும் காணாமல்
கண்ணால் செய்தி சொன்ன
கல்லூரி காலங்களில்...
உன் தோழிகளிடம்
என் நண்பனென
அறிமுகப்படுத்திய நேரங்கள்...
வெளிப்படையாக சொல்லாமல்
என் காதல் கவிதைகளை
என்னைவிட அதிகமாய் நேசித்து
எல்லாரிடமும் அதன்
பொருளை விவரித்த
பொன்னான தருணங்கள்...
யாரும் அறியாமல்
உன்னோடு
கால் வலிக்க நடந்து
கடையில் வாங்கிய பொருட்களின்
ரசிதில் நம்மிருவரது பெயரையும்
ஒரு சேர பார்த்து
ரசித்த வினாடிகள்....
உன்னோடு அருந்தும் போது
மேலும் சுவைத்திட்ட
பழ ரசங்கள், உணவு வகைகள்...
நேரம் தெரியாமல்
சமூகம் பற்றியும்
காதல் பற்றியும்
உன்னோடு பேசிய
உன்னதமான மணித்துளிகள்....
உன்னோடு முதன் முதலாக
என் இருசக்கர வாகனத்தில்
பயணித்த போது காற்றினை விட
லேசாக உணர்ந்த நிமிடங்கள்..
இருவரும் சேர்ந்து
இரு கால்களையும்
ஒரு சேர வைத்து
ஒன்றாக சென்ற கோவில்கள்....
பிரியும் நேரம் வந்தும்
உன்னை விட்டு
வீடு செல்ல மனமின்றி
உன்னருகில் நின்று
அடம்பிடித்த நாழிகைகள்...
அவ்வப்போது நமக்குள் வந்த
அர்த்தமில்லாத ஊடல்கள்...
என அத்தனை
மறக்க இயலா சம்பவங்களையும்...
மற்றவர்களும் அறிந்து கொள்ள...
மற்றற்ற மகிழ்ச்சியான முடிவெடுத்திட
நீ நேசித்த கவிதையில்
தொகுப்பாக வெளியிடுகிறேன்...
நேசம் கொண்டவளே!.. புது
சுவாசம் தந்தவளே!....
படித்தவுடன் சொல்லி அனுப்பு
ஏதேனும் விடுபட்டிருந்தால் -
நம் வாழ்வை தவிர!...

அலை மனசு....

உனெக்கென்ன
என்னை பற்றிய
எந்த சலனமுமின்றி
கிணற்று தண்ணீரை போல
அமைதியாக உள்ளாய்.....
ஆனால்....
நீ குடிகொண்ட
இந்த மனசு மட்டும்
ஆழ்கடல் அலையை போல
எந்நேரமும் உன்னின்
நினைவுகளை சுமந்து
நித்திரையை கலைத்து
கொண்டிருக்கிறது.....

நினைவலை...

தண்ணீரில் எவ்வளவு
அழுத்தினாலும் மேல்வரும்
தக்கையை போல...
என்னதான் உன்னை
மறக்க முயற்சித்தாலும்
நினைவலைகளில் நீந்தி
மனதுக்குள் வந்து விடுகிறாய்

நம்பிக்கை வார்த்தை....

என் எண்ணங்களில் நிரம்பி
என்னாலும் சாதிக்க முடியுமென்று
எனக்கு நம்பிக்கை தந்து
என்னை சேராமலே சென்றவளே...

உன்னை சந்திக்காத ஒவ்வொரு கணமும்
உன்னை அடையாத வாழ்வின் நொடிகளும்
உனது நம்பிக்கை தந்த வார்த்தைகளால்
உருண்டோடி செல்கிறதென தெரியுமா கண்ணே!...

காதலுக்கு நன்றி.....

வற்புறுத்தி வருவதில்லை காதல்.
கட்டாயபடுத்தி வாழ்வதில்லை வாழ்கை.
அது -
ஒரு புரிந்துணர்தல்.
ஒரு அழகான கவிதை.
நேசிக்க சுவாசிக்க நம்பிக்கையளிக்கும்,
நம்மை வாழ்வின் வேறு ஒரு
பரினாமத்தை கானச்செய்யும்
உருவமில்லா குழந்தை.
சொல்லி புரிய வைப்பதில்லை,
உணர்ந்து தெரிந்து கொள்ளுதல்.

நன்றி கண்ணம்மா!...

உன்னால் நான் உணர்ந்த
அந்த விவரிக்க இயலாத உணர்வுகள்……
என்னை எரித்தாலும் மிஞ்சும்
என் சாம்பலிலும் எஞ்சி இருக்கும்.
எனக்கான….,
என் கவிதைக்கான….
களமாக நீ இருந்ததற்கு….,
மறந்து போன என் எழுத்துக்களை
எனக்கு மீட்டு தந்ததற்கு...
வாழ்வின் வெளிச்சம் குடுத்ததற்கு....
வாழ வேண்டும் என்ற வேகம் தந்தற்கு.....
நன்றிகள் பல..  பல!...

சிங்கை நாடே!...

என் தாய் மொழியை
தமிழ் மொழியை - உன்
ஆட்சி மொழியாய் கொண்ட
சிங்கை நாடே!...
பணியாற்ற வந்த இடத்தில்
பாசமிக்க நண்பர்களை தந்து
பலவித மொழி பேசும்
பல்லாயிரம் பேர்களை
சந்திக்க வைத்து - என்னை
சிந்திக்க வைத்து!...
சிறந்ததொரு வாழ்வுக்கு
அடித்தளமிட்டு!... அடியவன்
எளியவன் என்னையும்
அரவணைத்த எங்கள்
அன்பின் முகவரியே!...
எங்கள் தமிழர்களை
எப்போதும் உன்
மகுடத்தில் வைத்துள்ளாய்..
எங்கள் சிகரத்தில்
என்றென்றும் உனக்கு
மணிமகுடம் உண்டு!...

உணர்வு!...



செந்தூர தமிழில் - உன்
தேன் குரல் கேட்கும்
வாய்ப்பு கிடைக்க பெற்றது போது
ஏற்பட்ட உணர்வு தான்....
வில்லை உடைத்து சீதையை
கைபிடித்த போது இராமனுக்கும்
ஏற்பட்டிருக்குமோ ?  

வருகிறேன்!..

மண்வாசனை நுகர்ந்து
மண்வெட்டி பிடித்து
வரப்புகளில் நடந்து
வானத்து பறவைகளை
ரசிக்க வருகிறேன்!...
என்னை தாலாட்டிய
என் மண்ணே!..
என்னை ஆளாக்கிய
என் உறவுகளே!...
உங்களை கான
உவகையோடு வருகிறேன்!.
ஆறு - குளம்
அன்பு நண்பர்களென
உங்களை பார்க்க
உறக்கமின்றி தவித்து
ஓடி வருகிறேன்!..

சந்திப்பு

அள்ளி அனைத்து
அன்பாய் ஒரு
முத்தம் தர...
முழு நிலவே
உன்னை கட்டியணைத்து
உலகின் மிச்சம் ரசிக்க...
மனதை மயக்கிய உன்
மாமன் பறந்து
வருகிறேன் முதல்
வாரம் நவம்பரில்!.. 

வாழ்வு...

உங்களுக்கு தோன்றும்
உணர்வுகள் எங்களுக்கும்
ஏற்படும்!...
நீங்கள் செய்ய நினைப்பதில்
நாங்கள் சிலவற்றை செயல்படுத்த
முற்படலாம்!...
சத்தமாய் பேசுவது சரியெனில்
சுத்தமாய் சத்தமாய் பேச
நிலைப்படும்!...
வாழ்கை எனும் வண்டியை
வழிமாறாமல் இழுக்கும்
இரு மாடுகளை போல
இருவரையும் எண்ணிடுங்கள்!..
இங்கே ஆண்வேறல்ல பெண்வேறல்ல
இன்முகத்தோடு வாழ்ந்திடுங்கள்!..

என் அண்ணனின் 12 ம் ஆண்டு நினைவு நாள்

06-09-2012
தாயோ தந்தையோ
தரணியில் நண்பனாக
சகோதரனாக வழிகாட்டியாக
சகமனிதனாக இருந்ததுண்டு!..
என்ன தவம் நான் செய்தேன்
என் அண்ணா!.. நீ எனக்கு
தாயாக தந்தையாக ஆசானாக
தடம் மாறாமல் வாழ ஒரு
நண்பனாக, அண்ணனாக கிடைத்திட!...
உன் பெயர் சொன்னால்
ஊரே புகழும் செல்வம் நீ!..
கருணை நிறைந்த காந்த
கண்ணழகன் என அறியப்பட்டவன் நீ!..
வீரத்தின் இனத்தில் பிறந்த
வீரராசனின் மகனே!.. அழியாத
புகழ் கொண்ட இளங்கோவடிகள் போல
பெயர் பெற்ற எங்கள் இளங்கோவன் நீ!..
உன்னை போல பலர் உருவாகினாலும்
உன்னிடத்தை நிரப்பிட முடியாது என
உன்னை  அறிந்தவர்களால்
ஆராதிக்கபடுபவன் நீ!..

நீ எம்மை விட்டு சென்று
ஒரு குறிஞ்சி மலர் பூத்துவிட்டது!..
எப்போதும் தோற்காத
என் அண்ணனே!.. உனது
வார்ப்பு தோற்காமல் இருக்க  என்
வாரிசாக மீண்டும் பிறந்து விடு!.. 

எங்கள் தந்தையின் 16 ஆண்டு நினைவு நாள் அஞ்சலி

07-08-2012

அய்ந்து  கல் தொலைவுக்கு
அப்பால் கல்வி கற்க
அனுப்ப யோசித்த காலத்தில்
அய்யேழு  கிலோமீட்டர் தள்ளி
அற்ப்புதமான தொரு புனித
ஆரோக்கிய அன்னை பள்ளியில்
அக்கறையாய் எம்மை சேர்த்து
அறிவினைபெற வழிவகுத்த
அய்யனே!...

அரசியலில் பணபலமும்
அதிகார பலமும்
அங்கங்கே பரவிகிடந்த
அந்த காலத்தில்
அத்தனையையும் மீறி
அனைவரும் அறியும்படி
வீரமாய் வீரராசனாய்
அல்லும்பகலும் உழைத்தாய்
முதல்வனாய் நம் ஒன்றியத்தில்
மொழிப்போர் தியாகியான
எங்கள்  தந்தையே!...

செல்லும் திசையெங்கும்
சிறப்பாக செயல்பட்டு - உமது
சிந்தை வியக்கும்
சிறந்த அனுபவங்களை எமக்கு
அன்பாக எடுத்துரைத்து
அழகான ஒரு வாழ்வுக்கு
அடித்தளமிட்ட எங்கள்
ஆசானே!....

எல்லா வகையிலும் நீவிர்
எல்லாருக்கும் ஒரு முன்னுதாரணமாய்
எங்களோடு வாழ்ந்தீர்கள்
ஆனால் -
எப்படி இறக்க வேண்டும்
என்பதற்கும் எடுத்துக்காட்டாக
எங்களை விட்டு சென்றதேனப்பா?

எதிர்படும் ஒவ்வொரு அனுபவமும்
எதிர்கொள்ளும் சில சாதனைகளும்
என்றென்றும் நீங்கள்
எங்களுடனே வாழ்கின்றீர்கள்
என்ற நம்பிக்கையில்
வாழும் நாள் வரை
வையகத்தில் உம்மை
போற்றிடுவோம் அப்பா!...       

ஏமாற்றம்...

மூவிரண்டு வருடங்களாக - இவனின்
மூச்சு காற்றினில் கலந்தவள்
மூவாரயிரம் கல்களையும் கடலையும்
முழுநிலவாய் தாண்டி வந்து தன்
முகமதனை காட்டிட மாட்டாளா?

வந்து சேரும் நாள் - என்
வாழ்வில் வசந்தம் வீசும் காலமென
வையகத்தில் வாழ்ந்திருந்தேன்
வாசம் வீசும் பாவையவள்
வாஞ்சையுடன் பார்வையால்
வருடிட மாட்டாளா? என

நெஞ் செல்லாம் காற்றால்
நிரப்ப பட்டதை போல
நின் வருகையால் ஒரு
நித்திய பரவசமடைந் திருந்தேன்
ஆனால் - என்னை புறந்தள்ளி
அமைதியாய் சென்றதேனடி?

முரண்பாடு...

உன் தோள்களில்
என் மாலையினை
நீ தாங்காததால்
நான் உனக்கு
தோழனானேன்!..

யுத்தம்

உன்னை நினைக்க நினைக்க
உயிருக்குள் ஒரு புது இன்பம்
உன்னை என்னில் எழுத எழுத
உயிரோடு ஒரு புது யுத்தம்

தமிழே!..

(எனது 175 வது படைப்பு )

தமிழே!.. என் உயிரே!...
மனதில் தோன்றி
எண்ணங்களில் உருமாறி
வார்த்தைகளில் நீ வெளிப்படும்
அழகு!.. அமுது!...

உன்னை சிந்திக்கும் நொடிதனில்
வார்த்தையாக வெளிப்பட்டு
எதிரில் இருப்பவரின்
மனம் கவரும் நீ
கம்பீரம்!.. கலை!...


நதியின் நளினம்  போல
உன் சொல்லின்
வளைவும் நெளிவும்
பேசுபவரையும் மயக்கும்
புவிஈர்ப்பு  விசையாய்  நீ
இனிமை!.. இளமை!...

சாகும் நாள் வரை
உன்னை நேசித்து
சுவாசித்திட வரம் தா
என் தாயே!.. 
என் தமிழே!... 

பெரும்பாக்கியம்....

உன்னின் ஒவ்வொரு செயலையும்
உள்ளத்தின் பெருஉவகையுடன்...
உடனிருந்த பார்த்து
உன்னை ரசித்த
அந்த தருணங்களும்...
உன் செல்ல சண்டைகளின்
உளமான அன்பையும்...
மீண்டுமொரு முறை
அனுபவித்திடும் பாக்கியம்
கிடைத்திடுமா - என் அன்பே? 

அன்பே.....

அருகினில் இருந்த
அற்புத தருணங்களில்
அவை நாகரிகம் கருதி
அமைதியாக நாம் பிரிந்தாலும்
அல்லல்படும் மனம்
அனுதினமும் நினைத்திடுதே!..
அன்பே உன்னையே
அணுவணுவாய் ரசித்திடுதே!...

அன்னையர் தின வாழ்த்துக்கள்

என் வாழ்வுக்காக
உன் வாழ்வையே அர்பணித்து
உலகின் ஒவ்வொன்றையும் கற்றுத்தந்து
அன்பையும் அறனையும்
அடிமனதில் பதியவைத்து
அமுதென்னும் தமிழையும்
அழகாய் நேசிக்க வைத்து
சுற்றத்தும் நட்பையும்
சுவாசமாக சுவாசிக்க வைத்தவளே!
உலகின் இணையற்ற என்
உயிரினும் மேலான
என் அம்மாவே!...
நன்றி என்ற
ஒற்றை வார்த்தையில்
உனக்கு நான்பட்ட கடனை
அடைக்க முடியாது
ஏழேழு தலைமுறையிலும்
உன் மகனாகவே
பிறந்திட வேண்டும் அம்மா!..
ஈன்ற தாயோடு - என்னை
போற்றி வளர்த்த அன்னைகளுக்கும்
அனைத்து அம்மாக்களுக்கும் - இந்த
அன்னையர் தினத்தில்
வாழ்த்துகளோடு நன்றிகளை
காணிக்கையாக்குகிறேன்!..

சிவாஜி கணேசன்

உலகின் ஒப்பற்ற நடிகனே
உன்னை முழுமையாய்
ஒருவரும் பயன்படுத்த வில்லை
என்பதில் சிறு வருத்தம் இருந்தாலும்
உன்னை பெற்றதால் தமிழோடு
இந்த இனத்தோடு
இவனும் பெருமைபடுகிறான்
 
 
 

ஹைக்கூ

திருவிழாவில் இருக்கும்
ஆயிரம்  பேருக்கு
மத்தியிலும் - நீ
தனித்து தெரிவாய் - உன்
மந்திரப் புன்னகையால்!...

=================================


ஹைக்கூ எனும்
இரு வரி புலம்பல் போல
இரவெல்லாம் உன்னை
பற்றிய புலம்பலாக
இதமான கனவு

===================================

ஒரு முறை

என் எண்ணங்களின் 
எழுச்சியாய்!...
என் சிந்தனைகளின் 
சிற்பமாய்!...
என் நம்பிக்கையின் 
விழுதாய்!..
என் கற்பனைகளின் 
காவியமாய்...
என் வாழ்வின் 
வெளிச்சமாய்...
என் கண்ணெதிரில் 
இருந்த உன்னை 
கவனிக்க தவறியவனின்   
கடைசி நிமிடங்களில் - அந்த 
வெட்கத்தின் நளினத்தோடு 
உன் ஒத்தை புன்னைகையோடு 
ஒரு முறை என்னை பார்த்துவிடு
முழு நிறைவோடு 
மூர்சையடைவேன்!...

இசைத்தாயே!...

மார்கழி திங்களில் வரும் 
       சங்கீத சாரலாய் என்
மனதினுள் ஒய்யாரமாக  
      சம்மணமிட்ட இசைத் தாயே!...

சங்கீத அறிவு சற்றே  
     இல்லாவனின் பாசம் 
சாகும்வரை வேண்டாமென்று 
      இரக்கமில்லாமல் போனதேன்?




தரிசிக்க வேண்டுமடி!...

வாழும் நாளெல்லாம்
வலி தருபவளே!... 
நான் 
வையகத்தை விட்டு
செல்லும் முன்... 
வாடாமலரே!.. என்
வாழ்வே!... ஒரு முறை 
எந்தன் உயிர் 
உந்தன் முகம்தனை  
தரிசிக்க வேண்டுமடி!...

வாழ்வே!...

வாழ்கையை கற்றுத்தந்தாய்! - என்
வாழ்வாக நீயே இருந்தாய்!
வாழ்வின் வேகம்  தந்தாய்! - என் 
வாழ்வின் தாரமாய் உன்னை நினைத்தால்
வரலாற்று பிழை செய்தது போல - என்னை
வழியிலேயே விட்டு சென்றதேனடி?  

வெற்றிடம்!...

நடந்து கொண்டிருக்கும் 
நிகழ் காலத்தில் 
கடந்து செல்லும் 
உன்சாயல் ஒத்த பெண்களை 
பார்க்கும் போதெல்லாம் 
என் வாழ்வில் நீ தந்த 
வெற்(றி)றிடம் - மனசுக்குள் 
வந்து செல்கிறதடி!...

வலி!...

காதலின் வலி 
காலத்தின் கட்டாயம் 
எனில் 
மொத்த ஆயுளின் நிமிடங்கள் 
அந்த வலியின் மிச்சங்கள் 


வாழ்வு

ஒவ்வொருவரும் ஏதோ
ஒரு தருணத்தில்
ஒவ்வொருவரையும் ஏமாற்றி
ஒவ்வாத ஒரு வாழ்வு
ஒவ்வொரு நாளும் வாழ்கிறோம்!...

காதலிலும் - ஒவ்வொரு
கணத்தையும்  - இதயத்தின்
காயத்தையும் -  வலியையும்
கண்ணுக்குள் வைத்து
காலத்தை கழிக்கிறோம்!...

என் காதலே!

காதலே என்றதும்  - என்
கைகளில் புகுந்து - எழுத்தாய்
வெளிப்படுவாய் - முன்னொரு காலத்தில்!...
இன்றோ - பரிதவிக்கிறேன்; காதலே!
உன்னை மட்டும் நேசித்து
என்னை நேசித்தவளை புறம்தள்ளியபோது
அவள் பட்ட வேதனை - இன்று
நான் படவேண்டுமென
என்னை விட்டு காத தூரம்
ஓடுகிறாயோ?
காதலின் வலி அதன் தோல்வியில் அல்ல
அதன் புறக்கணிப்பில் என உணர்த்துகிறாயோ
காதலே உன்னை மட்டுமே நேசித்தவன்
உன்னை மட்டுமே நேசிப்பவன்
உன்னிடம் வேண்டுகிறேன் -
வெறுத்துவிடாதே  என்னை
நீயின்றி யார் எனக்கு மருந்தாவார்?  

அம்மா...

கருவாய் சுமந்து
கண்ணாய் காத்து
சிறுவயதில் சிங்காரித்து
இளவயதில் பொறுத்து
உன் வாழ்வை தொலைத்து
என் வாழ்வையே
உன் வாழ்வாய் வாழ்ந்தவளே! ...

என் மகளை சுமக்கும் - இந்த
என் தாய்மையில் தான்
உணர்கிறேன் அம்மா...
என் மீதான...
உன் அக்கறையை...
உன் மகிழ்வுகளை...
உன் பதற்றத்தை...
உன் பாசத்தை...

 

தமிழாய் நிமிர்ந்திடு!..

முல்லை பெரியாறு என்றால் - அது
திருநெல்வேலிகாரர்களின் பிரச்னை என்றும்
பாலாறு என்றால் - அது
செங்கல்பட்டுகாரர்களின் பிரச்னை என்றும்
காவிரி என்றால் - அது
தஞ்சாவூர்காரர்களின் பிரச்னை என்றும்
அணுஉலை ஆபத்து என்றால் அது
கூடங்குளம் பிரச்னை ஆச்சே என்றும்
நச்சுப்புகை தரும் ஸ்டெர்லைட்   என்றால் - அது
தூத்துக்குடி பிரச்னை என்றும்
நம்மை சுற்றி நடக்கும் எந்த பிரச்சனையிலும்
கவலையின்றி - தன்னைப்பற்றி மட்டுமே
முன்னிறுத்தி தனிமனித வாழ்வுக்கு
பழக்கப்பட்டு போன -
இந்திய தேசத்தின் இதயங்களே!..
தேசபக்தியின் மொத்த உருவங்களே!..
என் தமிழர்களே!
உங்கள் தமிழகத்தின் நலன்
ஒவ்வொன்றாய் நசுக்கப்பட
ஒவ்வொரு உரிமையாய் பறிக்கப்பட
ஒரு நாள் உன் தனிமனித வாழ்வு
கேள்வியாக்கப்படும் போது... - நீ
தோள்  சாய கூட ஆளில்லாமல்
ஒத்தைமரமாய் நிற்க்கப்படும் சூழல் வரும்
எனவே - இன்றே
தமிழாய் நிமிர்ந்திடு!..
தமிழனாய் வாழ்ந்திடு !..

வாழ்த்து

இன்று பிறந்த நாள் காணும் என் தோழிக்கு...

சுற்றமும் நலமாய் இருக்க
பாசத்துடன் நேசம் கொள்ளும்
சிநேகிதியே - வரவிருக்கும் ஆண்டுகளில்..
நின் கனவுகளும் மெய்ப்பட
சுற்றும் இந்த உலகினை
பாவை நீயும் உன் நேசத்தோடு
சிட்டுகுருவி போல சுற்றிட
நிறைவான வாழ்வு வாழ்ந்திட வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடனும்! நலமுடனும்!
இனிய பிறந்ததின நல்வாழ்த்துக்கள்!...

பிரிந்ததேனடி...

இமயமே இதயமே என்னை பிரிந்ததேனடி
இருவரும் இணைந்தே எங்கும் சென்றதேனடி
பரிதவித்த எனக்கு பாசம் காட்டியதேனடி
பிரிவெனும்   துயரினில் என்னை தள்ளியதேனடி
ஊரெல்லாம் உன்பெயர் சொல்லி நான்
உன்மீது பைத்தியம் ஆனேனடி
உயிர் வரை உன் காதல் சொல்லி - என்
உதிரம் சிந்த செய்தது ஏனடி
பிரிவென்பது  உன் முடிவென்ற பின்னால்
பாதையில்ல பயண மொன்றில் 
பரிதவிக்கும் பயணியாகி போவேனோ? 

நம்வாழ்வு...

காற்றினில் கரையும்
கண்ணீரை போல
கனவுகளுடனே போனதடி
கண்ணே - நம்வாழ்வு!..

நினைவு

என் எண்ணத்தில் உள்ளதை
எளிதில் எழுத முடிந்தது
என்னவளாக நீ இருந்தபோது!... 

மனதினில் எழும் அலைகளை 
மடலாக கூட மாற்றமுடியவில்லை - நீ   
மாற்றானின் மனைவியான பின்பு!...   


பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

என்னுள் பாதியாக வந்தவளே!..
என் எண்ணமாகவே வாழ்பவளே!...
எனக்காக பிறந்தவளே!.. - நீ 
தமிழ் போல வாழ்க!...
தலைவர் போல வளர்க!...
என நம் உறவுகளோடும் 
நட்புகளோடும் சுற்றத்தோடும் 
வாழ்த்துகிறேனடி!.. 
வாழிய பல்லாண்டு!...     
வளமுடனும்! நலமுடனும்! 

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

ஒட்டு மொத்த குடுபத்தினரும்
ஒருசேர குழுமும் ஒருநாள்
புத்தாடை உடுத்தி - தம்வயலில்
புதிதாய் விளைந்த  அரிசியினால்
தித்திக்கும் கரும்பு துணையிருக்க
திகட்டாத வெல்லத்துடன் - கொத்து
மஞ்சளும் முந்திரியும் திராட்சையும்  
மனம் பரப்ப - விவசாயியின்
அனைத்து விளை பொருளும்
அடுப்படிக்கு வந்து சேர
குடிசை தொழிலை ஊக்குவிக்க
குழைத்த மண்கொண்டு செய்த
புதிய மண்பானையில்- மனமகிழ்ச்சியோடு
புதிதாய் பொங்கும் பொங்கல்...
சூரியனுக்கும் கால்நடைகளுக்கும்
ஊருணிக்கும் ஊருக்கும் - என
எம்தொழிலுக்கு உதவும்
எல்லாருக்கும் நன்றி சொல்லி
ஏற்றமிகு வாழ்வு வாழ்ந்திட - இனியும்
ஏமாறாமல் நம் உரிமை காத்திட
தமிழனாய் ஒன்றுபட்டு சபதமேற்று
தமிழர் திருநாளை  கொண்டாடிட
அனைவருக்கும் வாழ்த்துகள்.. 

உறவுகளின் நினைவுகள்...

எல்லா  இழப்புகளும்
எப்படியாவது நம்மை
அதன் தாக்கத்திலிருந்தும்
அந்த  நினைவுகளிலிருந்தும்
மீட்டு விடுகிறது!..

வாழ்வின் போராட்டத்தால்..
வாழவேண்டிய நிர்பந்தத்தால்..
நண்பர்களின் நேசத்தால்..
நல்லவர்களின் பாசத்தால்..
மீண்டோ; மறந்தோ போகிறோம்

எல்லோரும் ஒருமித்து
எதிர்காலத்தை நோக்கி  
நிகழ்காலத்தில் ஓடுகையில்
இறந்தகாலம் தந்த எல்லா
இழப்புகளும் மறந்துவிடுகிறது..

வாழ்வுதந்த தந்தை..
வழிநடத்திய அண்ணன்..
அரவணைத்த தாத்தாபாட்டி - என
அனைத்து உறவுகளின்
நினைவுகள் கூட
நிழல்படத்துடனே நின்றுவிடுகின்றன..

எங்கள் தேசம்...

பல அடுக்கு மாடி
கட்டிடங்கள்...
பறந்து விரிந்த பசுமையான
தரைத்தளங்கள்....
குப்பை இல்லா தூய்மையான
சாலைகள்...
சாக்கடை இல்லாத சுத்தமான
வீதிகள்...
குளு குளு வசதியுடன்
பேருந்துகள்...
குறித்த நேரத்தில் வரும்
ரயில்கள்...
நடந்து செல்ல அனைத்து நிலைகளிலும்
நடைபாதைகள்...
விளையாட குறிப்பிட்ட தூரங்களில்
இடவசதி...
வீதிக்கு ஒரு  பூங்கா...
வீட்டுக்கு அனுப்ப பணம்...
என எல்லா வசதிகளும்
இந்த அந்நிய தேசத்தில்
இருந்தாலும்....
அன்பாய் நேசம் விசாரிக்க
அண்டை வீட்டில் ஆளில்லை!...
அக்கறையாய் திட்ட  எந்த
பெரியவர்களும் இல்லை!...
உறவுகளை வீட்டுக்கு கூப்பிட
உரிமை இல்லை!...
தடுமாறும்போது தூக்கி  நிறுத்தும்
நண்பர்கள் இல்லை!...
அரவணைக்கும் சுற்றம் இல்லை!..
அன்பு கொள்ள பெற்றோர் இல்லை!...
குப்பையாய் இருந்தாலும்...
சாக்கடையில் நடந்தாலும்
எங்கள் தேசத்துக்கு நிகராகுமா
இந்த அந்நிய தேசம்!...  

தலைவன்...

மன்னராட்சியில் அன்று
மன்னன்  என்பவன்
தன்னலம் கருதாமல்
தன் மக்கள் நலம்
பேணியவன்!...

குடியாட்சியில் இன்று
தலைவன் என
முன்னிருத்த படுபவர்கள்
தன் குடும்ப நலமே
முக்கியமென நினைப்பவர்கள்!...

 அத்தி பூத்தார்ப்போல
அவதரிக்கும் உண்மை தலைவனை..
மக்களுக்குக்காக தன் கட்சி
மரியாதைகளை உதறித்தள்ளும்
மனிதனை  - இக்காலம்
நமக்கு தருகிறது - அவர்களை
நாம் தான் இனம் கண்டு
நாளைய நாயகனாய்
நம் இனம் வளர வாழ
நாம் போற்றி வரவேற்க வேண்டும்!..  

என் கிராமம்...

( இது எனது வலைதளத்தில் 150 வது படைப்பு)


ஊருக்கு மத்தியில் தவழும்
ராஜாமட கால்வாயின் உதவியால்
முப்போகம் விளையும் விவசாயம்
ஊரின் முகப்பிலிருந்து முடிவுவரை
பச்சை தரை விரிப்பாக
செழித்து விரியும் இயற்கை!..
ஊருக்கு நடுவில் ஒய்யாரமாய்
மேனிலை பள்ளி - அடுத்து
கூட்டுறவு வங்கியும்,
நுகர் பொருள் வங்கியும்..
கபடி, வாலி பால், கிரிக்கெட் என
எல்லா விளையாட்டிலும் பரிசினை
பெற்று வரும் மாணவ, வாலிபர்கள்..
மாவட்ட ஆட்சியர் முதல் கொண்டு
கடை நிலை ஊழியர் வரை
எல்லா அரசு பதவிகளிலும்...
கிளை செயலரில்  ஆரம்பித்து
மாவட்ட செயலர், சட்ட மன்ற உறுப்பினர் என
அரசியலின் அனைத்து பதவிகளிலும்...
திருப்பூரில் தொழிலாளி முதல்
அமெரிக்காவில் விஞ்ஞானி வரை...
என எல்லா நிலைகளில் எம்மை
வளர்த்து விட்ட
எம் மண்ணை,
நம் கிராமத்தை,
நாமெல்லாம் மறந்தது சரியா
என் கிராமத்து உறவுகளே!...     

வாகை சூடும் தமிழன்

கர்நாடகாவில் காங்கிரஸ் வருமெனில்
காவேரி வற்றவும் செய்வோம்..
ஆந்திராவில்  காங்கிரஸ் ஆட்சிஎனில்
ஆத்திரப்பட்டாலும் பாலாறு வராது..
ஒருதொகுதி கிடைத்தாலும் கேரளாவில் -
ஒருசொட்டு  வராது முல்லைபெரியாரில்..
மக்களின் எழுச்சியில் வேண்டாம்  என்றாலும் எங்கள்
ம(ப)னம் கு(து)ளிர அனல்மின் நிலையம் தருவோம்..
தமிழன் எது கேட்டாலும் இல்லை என்போம்
தமிழ்மண்ணை  பாதுகாப்பில்லா  பரிசோதனைக்கு உட்படுத்துவோம்..
போராடும் தலைவர்களை உள்ளே போடுவோம்
பேட்டி தரும் தறுதலைகளுக்கு பெட்டி தருவோம்..
ஓட்டு போட்ட மக்களின் வாய்களுக்கு
பூட்டு போடுவோம்!.. மீறி  போராடினால்
கொலவெறி பாடும் நடிகருக்கு
கொத்துபரோட்டா விருந்து வைப்போம்..
இன்னும் போராடினால் ஒரு நடிகையின்
இடுப்பை காட்டி கலாச்சாரம் காணமல் போனதென்போம்..
மானத்தோடு போராடும் தலைவன் கிடைக்கபெற்றால்
மறைந்திருந்து அந்த தலைவனை கொல்ல பார்போம்..
என்றெல்லாம் கொக்கரிக்கும் காங்கிரசின் தலைமைக்கு
எங்கிருந்தோ வந்தவர்  தலைவியாம்...
மானமுள்ள மனிதர்களே இன்னும் நீங்கள்
மங்கி கொண்டிருக்கும் காங்கிரசில்
இருந்தால் குறித்துகொள்ளுங்கள்
இங்கிருந்து தான் உங்களின்
அழிவு ஆரம்பமாகிறது...
ஆண்ட தமிழன் தான் உங்களை
அடிச்சுவடு காணமல் விரட்ட போகிறான்
புறப்பட்ட மக்கள்படை புதிய
புலிப்படையாய் வெற்றி வாகை சூடும்
புதிய ஆண்டில், புது வெற்றியோடு!...

வாழ்வோடு நீ

உன்னை பார்க்க பார்க்க
உள்மனதில் ஒரு குதுகலம்  
உன்னோடு பேச பேச
உயிரினில் ஒரு பரவசம்
உன்னோடு வாழ்தலை நினைக்கையில்
உயிரோடு ஒரு சொர்க்கம்!..

ஏனடி சென்றாய்...

அர்ச்சுனனின் வில்லை 
அச்சுபுத்தகத்தில் பார்த்தவனிடம்  
உன் இதழ்களில் பார்க்கவைத்து
ஏதும் அறியாதவனாக
ஏதோவென்று வாழ்ந்தவனை
எல்லாராலும் அறியபட்டவனாக்கி
என் வாழ்வினில்  வந்து
ஏதும் அறியாதவள்  போல
ஏனடி சென்றாய்? 

அழகின் ஊற்றே...

ஊட்டி மலர்தோட்டத்தில்
உள்ள பூக்களெல்லாம்
உன் முகம் பார்த்த நொடியில்
தன் தலை தாழ்த்தி கொள்கிறது

நாணல் செடி கூட நாணத்தால்
நன்னிலம் நோக்கி தலைசாய்க்கிறது
உன் நாணத்தின் நளினம் கண்டும் 
உன் கொடியிடை அழகில் மயங்கியும்

இயற்கையே உன்னை பார்த்து
இறக்கையில் ஒண்ணுமே இல்லாத
இந்த இளைஞன் எம்மாத்திரம்....  

தரிசனம்...

ஆயிரமாயிரம் கவிதைகள்
அடுத்தடுத்து வருகின்றது
அமைதியான உன் கண்களை 
அருகினில் தரிசிக்கும் போது....

கேள்வி?...

ஆயிரமாயிரம் மைல்களுக்கு
அப்பால்  இருந்தபோது
உன்னில் நான்கண்ட
உள்ளமுருகிய காதல்
உன்னருகினில்
வாழ்ந்திடும்போது
வாய்க்காதது ஏனோ? 

பிரிவு..


அழும் குழந்தை கூட
அழகாய் சிரிக்கும்;
உன் உதட்டோர
உயிர் புன்னைகையால்...
கருணை நிரந்த
காந்த கன்னழகியே...
புதிதாய் பூத்த பூப்போல
புத்துணர்ச்சியுடன் எப்போதும்
வலம் வர தெரிந்தவளே!...
வாழும் நாள் வரை 
வலிதரும் பிரிவு தந்ததேனடி?  

வேறுபாடு..

உன்னை சிந்திக்கும் தருணங்களில்
உச்சம் தொடுகிறேன் - சாதனைகளால்!...
உன்னை சந்திக்கும் நேரங்களில்
அச்சம் அடைகிறேன் - சோதனைகளால்!...  

வலி..

நெருங்கி வரும்
ஒவ்வொரு வேளையிலும்
நெருஞ்சி முள்ளால்
நெஞ்சினில் குத்தும்
வலி தந்து
விலகுவதேனடி கண்ணே!...

எம் தலைவா!...

உலகில் அதர்மம்
தலையெடுக்கும் போது
கடவுள் அவதரிப்பார்
என்கிறது இதிகாசங்கள்
இது உண்மையா என
தெரியாது - ஆனால்
தமிழர்கள் தாக்கப்பட்டாலும்
தன்மானம் கேள்வியாக்கப்பட்டலும்
நீ அவதரிப்பாய்
என்பது உண்மை
எம் தலைவா!...



வருவாய் - என் தலைவா!..

எப்போது வருமென தெரியாது
தென்றலும் மழையும் - ஆனால்
அதில் மனம் நனையாதவர்
இருக்க முடியாது...
அதுபோல
எப்போது நீ வருவாய் என
எவருக்கும் தெரியாது
ஆனால் வருவாய்  -
எம் இ(ம)னம் து(கு)ளிர - நீ
வருவாய் - என் தலைவா!..

தலைவனின் பிறந்தநாள்

ஆளப்பிறந்த இனத்தின்
ஆணி வேறே!...
மும்முடி சோழனின்
முகவரியாய் திகழ்பவனே!...
கல்லணை கரிகாலனின்..
கம்பனின்  தம்பியே!...
வள்ளுவனின் - எங்கள்
வரலாற்றின் புதல்வனே...

தலைவனாய் தரணியில் இருந்தாலும்
தம்பி என எல்லோராலும்  அழைக்கப்பட்டவனே!
திரும்பிய பக்கமெல்லாம் அடிபட்டபோது
திருப்பி அடியென கற்றுதந்தவனே...

தமிழ் மண்ணில் நீ
தலையெடுத்ததும் தான்
மங்கி போய்கொண்டிருந்த எம்
ம(மா)னமும் தலைநிமிர்ந்தது...

உலக தமிழினத்தின் ஒரே
உயிர் அடையாளமே.. - நீ
வாழும் கால(கள)த்தில் - நானும்
வாழ்வதில் தனி கர்வம்கொள்கிறேன்

உன்னை வாழ்த்த வயதில்லை
உன்னை கவிபாட வாய்ப்பளித்த
தமிழுக்கும், நம் இனத்தின்
தலைவனான உனக்கும் - என்னின்
வணக்கங்களும்,..  வாழ்த்துக்களும்...
வாழ்க எம் தமிழ்!.. வாழ்க எம் தலைவன்!...

சகோதரி

சுகம்தானா என
ப்ரியமுடன் முகபுத்தகத்தில்
ரிதமாய் வினாவி
யாம் நலமென
ராஜ்ஜியத்தில் உள்ள
ஜனங்களுக்கு தெரியப்படுத்தி
என் கவிதைகளை இன்றும்
நினைவு கூர்ந்து
என் ரசிகையாய்  என்றும்...
என் தோழமைகளையும்
நேசம் பாராட்டியதில்
என் தோழியாய் இன்றும்...
என் நேசத்தையும் சுவாசத்தையும்
நீயும் சுவாசிப்பதில்
என் சகோதரியாய் என்றென்றும்...

மாவீரர் நாள்

தறிகெட்ட எம் வாழ்வு
தலைவனாய் நீ வாய்த்ததால்
திறம்பட நிமிர்ந்து
தமிழனை பெருமையாக
தரணியெங்கும் பார்க்க வைத்தது
உரிமைகள்   மறுக்கப்பட்ட போது
உறக்கமின்றி நீ சிந்தித்ததால்
உதயமாயிற்று நம் புலிப்படை...
முப்படை கொண்ட
முதல் விடுதலையியக்கமாய் - எம்
முதல்வனாய் - நீ
உருமாறிய  தருணத்தில் - நம்
உரிமைப் போராட்டத்தில்
உயிரையும் துச்சமென மதித்து
உயிரினும் மேலான தமிழுக்காய்
உயிரோடு வாழும் தமிழனுக்காய்
உயிர்நீத்த நம் மாவீரர்களுக்கு - நீ
உருவாக்கிய மாவீரர் நாளில்
எங்களின் சகோதரர்களை சகோதரிகளை
என்றும் நன்றியுடன் நினைவுகூர்ந்து
எம் மண்ணை
எம் முதல்வனின்
தலைமையில் மீட்டெடுக்க
எம் மாவீரர் நாளில்
சபதம் எடுக்கிறோம்...

நாம்...

வெற்று பக்கங்களாய்
இருந்த - இவனின்
வாழ்க்கை புத்தகத்தை
வண்ணத்துபூச்சியாக வந்து
வசந்தத்தை வரசெய்து 
விதவிதமான பூக்களால்
வண்ணமயமான பக்கங்களாய்
மாற்றியவளே!..
உனக்கான வாழ்வில்
உயிராக நான்
உறவாடாதது ஏனோ?

நான்...

ஏதும் எழுதப்படாத
ஏடுகளாக இருக்கும்
என் டைரியை போல
எந்த சலனமும் இல்லாமல்
என்னவளின் வருகைக்காக நான்!...

என்னவள்

நீயில்லா வாழ்வு
நீரில்லா தாமரையாக.... 

11-11-11 அரிதொரு நாளும்.. அரிதொரு தலைவனும்...

நூறாண்டுக்கு ஒரு முறை
வரும் நாளாய் இன்று...
நூறு தலைமுறைக்கும்  ஒரு
தலைவனாய் நீ என்றும்...

மீண்டும் இந்த நாள்
வருமா தெரியாது - ஆனால்
மீண்டு வருவாய் நீ - முள்ளி
வாய்க்காலில் புலி கொடி  ஏத்திட...

தலைவனாய் நீ கிடைத்தது
தமிழினத்துக்கு பெருமை
தாயகத்தை மீட்டு தருவதே
தமிழுக்கு நீ தரும் காணிக்கை...


  

வாழ்வு..

வாழ்வின் வழிகாட்டியாக வந்து
வசந்தத்தை வரசெய்த பெற்றோருக்கு...
சாதிக்க ஊக்கம்தந்து வாழ்வில்
உயர வைத்த சகோதரர்களுக்கு....
தனிமையை ரசிக்க பழகிய என்னை 
தன்னை ரசிக்க வைத்த மனைவிக்கு....
துவண்டு வீழ்ந்த  பொழுதெல்லாம் 
தோள் தந்த   நண்பர்களுக்கு...
நேசம் தந்து என்னை 
நேசித்த சுற்றமும் உறவுகளும்...
என என் எண்ணங்களும் செயல்களும் 
என்றென்றும் உங்களையே சுற்றி வந்தாலும்
விதி வசத்தால் - என் தாய்மண் தந்த 
மதியை அந்நியனுக்கு அடகு வைக்கும் 
அடிமை வாழ்வுக்கு பழகி - உங்களிலிருந்து 
அந்நியப்பட்டு போகிறேன் ... 

நிராகரிப்பு..

ஒரு முறை உன்னுடன்
      உரையாடிட மாட்டேனா என
ஒவ்வொரு நாளும் தவித்து
      உறக்கம் மறந்திருந்தேன் - உயிரே!...

ஒரு முறை உந்தன்
      திருமுகம் கண்டிட மாட்டேனா என
ஒவ்வொரு கணமும் நான்
      தீயாக உருகியிருந்தேன் - அன்பே!...

நேசங்களை சுவாசித்தவளே  - உன்னையே
       சுவாசமாக சுவாசித்தவனை - உன்
நேச கரங்கொண்டு அரவணைக்காமல் 
       சுடும் மண்ணில் நிற்ப்பது போல
நெஞ்சம் வலிக்க என்னை
       நிராகரித்தது ஏனடி - கண்ணே!...  

அடிமை வாழ்வு

கடந்து கொண்டிருக்கும்
காலத்தில் துன்பப்பட்ட
எங்களின் குடும்பத்தையும்
உறவுகளையும் - ஒரு
கௌரவமான சூழலுக்கு
ஆட்படுத்த எங்களையே
நாங்கள் உணர்சிகளற்றவர்களாக
மாற்றி கொண்டாலும்...

படபடக்கும் டாலர் நோட்டுகளை
பார்க்கும் மாத இறுதிநாளில் - அதை
பார்க்கும் எங்களின் கண்களில் தென்படும்
பரவசத்தையும் தாண்டிய வெறுமையை
உங்களால் உணரமுடிகிறதா?

இந்த டாலர் தேசத்தில் நாங்கள்
இழந்து கொண்டிருப்பது என்னவென்று
தெரியுமா உங்களுக்கு?

ஐந்து வயதில்
அஆ  என  ஆசான் கற்றுதந்த
அறிவினை!...

ஐயிரண்டு வயதினில்
ஆசையோடு கற்க ஆரம்பித்த
அறுபத்துநான்கு கலைகளை!...

மூவாறு வயதில்
முகம் அறிந்த
மொத்த சுற்றமும் உறவுகளும்!...

மூவேழு வயதில் - எங்களின்
முகவரி காட்டி
துவண்டு போன நேரங்களில்
தோள் தூக்கிவிட்ட நட்பினை!...


நெருங்கி வந்து தடவி பார்த்து
பாசம் காட்டும் தாத்தா பாட்டி!...
பார்த்த நொடியில்
பரவசம் கொள்ளும் அன்னை!...
பார்வையிலே பெருமிதப்படும் தந்தை!...

அள்ளி அணைத்து
அன்பு காட்டும் அண்ணன்...
கால்களை கட்டி கொள்ளும்
அண்ணனின் கடைக்குட்டி...

எல்லாருக்கும் முன்னாள்
யாருக்கும் தெரியாமல்
ஒரு அன்பு பார்வையில் எங்களின்
வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும்
பாசத்துக்குரிய மனைவியின் நேசம்

பசியாற்ற தன் குழந்தைக்கு
பலகதை சொல்லி -
நிலா சோறு ஊட்டும்
பக்கத்து வீட்டு அக்கா...

தயிர் சாதம், மிளகாய் வத்தல்,
தாமரை  பூத்திருக்கும் குளக்கரை...
அந்தி அரட்டைக்கு ஆத்தங்கரை...
அரசியல் பேசும் பெரியவர்கள்...
அவர்களை சீண்டும் இளைஞர்கள்...
சித்திரையில் வரும் திருவிழாவா  - அல்லது  
சிட்டாக வரும் தாவணிகளின் விழாவா என
சிந்தை மயக்கும் ஒரு மாதகால விழா...

    
மழையின் மண்வாசனை;  மனதை
மயக்கும் நெல்லின் வாசனை..
பச்சை வயல்வெளிகள்... 
பறவைகளின் கூடுகள்...  


இப்படி நாங்கள்
சின்னதாகவும், பெரிதாகவும்
கிடைக்கவேண்டிய எவ்வளவோ
சந்தோசங்களை
எங்களின் வாழ்க்கையை
எங்களை வளர்த்த கலாச்சாரத்தை
நாங்கள் இழந்துகொண்டிருப்பது
வெறும் உயில்லாத ஒரு டாலர்
நோட்டுக்காக மட்டுமே!...



போராட்டம்....

நின்னோடு வாழ்தலே வரமென்று
வேண்டுதலோடு என் முருகனிடம்
தாரமாய் உன்னை கேட்டு
நித்தமும் தவமிருந்தேன் - என்
வேதமும் நீயென களிப்புற்றிருந்தேன்
தாமரையே!..
வழக்கம்போல விதி சதிசெய்ய உன்னை
முழுமையாக புரிந்த நான்
இறுதிவரை போராடியும் பயனற்று போனதேனம்மா?

அந்நிய தேச வாழ்வு...

அந்நிய தேசத்தில் ஒரு
அரைநாள் உன்னோடு வாழ்தலே
ஆயுளுக்கும் இன்பமென
நினைத்திருந்தேன் !...
ஆறு திங்கள் உன்னருகினில் வாழ
ஆண்டவன் தந்த வாய்ப்பினில்
அரை நாழிகை கூட
நீ - என்னை
அள்ளி அணைத்திட வாய்ப்பில்லாமல்
ஆளுக்கொரு திசையில் பயனிப்பதேனடி?...

கானல் நீர்!...

வார்த்தைகளில் விளையாடி- என்
எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த
தெரிந்த எனக்கு - உன்னிடம்
நேரில் பேச வார்த்தைகளின்றி
தவிக்கும் போது - நான்
வெயில் காலத்தில் தோன்றும்
கானல் நீரை போலவே
உன் வாழ்விலும் தோற்றமளித்தேனோ!....


முடிவுகள்...

இப்போதெல்லாம் அவன் தன்
இயல்பை மீறி முடிவெடுக்கிறான்....
திடிரென எடுக்கப்படும் முடிவுகள்
தீங்கிழைக்கும் என தெரியாமலேயே
எடுக்க படுகின்றன - இங்கு
எல்லோராலும் - அவன் மட்டும்
விதிவிலக்கல்லவே !...

நாழிரண்டு வருடமாய்
நகமும் சதையுமாய் இருந்தவன்
நாகரிகம் கருதி எடுத்த முடிவென
நாலுபேரிடம் சொல்லி பிரிந்தபோது
எத்தனை வலி தந்தது
என்பதை அறிவானா?

ஆறெட்டு மாதமாய் - அவனின்
ஆண்மையை அசைத்து பார்த்தவள்
அங்குலமங்குலமாய் அவனை ரசித்தவள்
அவளோடு வாழ்தலே சொர்க்கமென
அவனுக்கு உணர்த்தியவள்...
அவசரகதியில் எடுத்த முடிவு
ஆயுளுக்கும் வலிதந்ததை அறிவாளா?

எண்ணற்றவர்கள் இப்படி தான்
ஏதோ ஒரு காரணத்துக்காக
எதேச்சையாக எடுக்கும் முடிவுகள்
ஏதோ ஒரு எதிர்வினையை
ஏற்ப்படுத்தி சென்று விடுகின்றன
ஆனால்,
அது தரும் வலியும் வேதனையும் - நம்
ஆயுளின் உச்சமாய் இருப்பதை
அனுபவிக்க துவங்கும் நேரத்தில்
ஆளில்லா ஒரு தேசத்தில்
அன்னியப்பட்டு போனதை போல - உன்னையே
ஆச்சர்யமாய் நீ பார்க்க நேரிடும்
அப்போது நீ தோள் சாயகூட
ஆளில்லாமல் போக கூடும்!....

பருவம்...

கைகெட்டா நிலவை காட்டி
உணவருந்த வைத்தது
குழந்தை பருவம்
கைக்கெட்டும் உன்னை காட்டி
சாதிக்க வைத்தது - என்
இளமை பருவம் !..

என் கவிதைகள்....

துணை இல்லா சிட்டு குருவி போல
விடை தெரியா ஏக்கத்துடன்
என் கவிதைகள்!...

என் மனது

எதை தேடி
இந்த அலைகள்
ஒவ்வொரு முறையும்
கரைக்கு வருகிறதோ
அதே போல
விடை அறியாமல்
உன்னை தேடியே
வருகிறது - என் மனது

வாழும் வரம்

ஊருக்கு வெளியில்
ஒருவரும் இல்லா தேசத்தில்
உன் மடியில் தலை வைத்து
இந்த உலகை ரசிக்காமல் போவேனா
இல்லை - செல்லமே ...
உன்னோடு வாழும் வரம்
வாழ்வெல்லாம் கிடைக்குமா?

காதல்..

நீ என்னருகில் இல்லா நேரங்களில்
நினைவுகளில் நீந்தி மெல்ல கொள்கிறாய்
நேரில் பார்க்கும் போது - ஏனோ
நெஞ்சில் இருப்பதை சொல்ல மறுக்கிறாய்
கனவுகளில் தினம் கண்ணாமூச்சி
காட்டுகிறாய் - என் காதலை சொன்னால்
காதுகளை மூடி கொள்கிறாய் -
என் காதலியே!...
நம் காதலை கரை சேர்ப்பாயா?

பூஜை...

இறைவனின் பூஜைக்கு வந்த
அர்ச்சனை பூவே
காலையில் - நீ
கலையாய் - கவியாய்;
மாலையில் - நீ
தீயாய் - தீபமாய்;
சங்கீதம் ஒலிக்க
மத்தளம் இசைக்க
மோகனமாய் நாட்டியம்
அரங்கேற...
வேதமாய் - நிவேதமாய்
புதினமாய் - புவனமாய்
மங்கைகள் குலவையிட
ஆண்டாள் அருள்வேண்டி
லாவகமாக ஊர்கூடி இழுக்க
சத்தியமாய் சொல்கிறேன்
ரம்பையும் ஊர்வசியும் போல
அசைந்தாடி வருகிறது
ஐயாறு அடி
அய்யனாரு தேரு....

காதலே உன்னை ஆராதிக்கிறேன்....

அன்பே!.. அழகோவியமே!..
ஆராதிக்க வேண்டியவள் அல்லவா நீ!...
அழகு பதுமையே
ஆர்பரிக்கும் அழகுடையவளே
ஆண்டவன் உன்னை எனக்கு
ஆண்டு சில கடந்த பின்
அறிமுகப்படுத்தியதின் நோக்கம் என்னடி?
வளைந்த வில்போன்ற புருவமும்
கருணை நிறைந்த கண்களும்
செதுக்கிய அளவான மூக்கும்
ரவிவர்மனின் தூரிகையில்
வரையப்பட்ட தோற்றத்தை உடைய
உன் செவ்விதழ்களும்...
காதணிக்கு அழகு சேர்க்கும் காது மடல்களும்
பிஞ்சு வெண்டைக்காய் விரல்களும்
சங்கு கழுத்தும்..........
என எல்லா
எண்ணமுமாக இருந்தும் - நீ
என்னவளாக மாறாமல்
போனதேனடி?.....

என்னவளின் பிறந்த நாள்

24-Jan அன்று பிறந்த நாள் கொண்டாடும் எனது அன்பு மனைவி மோகனாவிற்கு..... ..

ஏமாற்றமே வாழ்வு என்றிந்தவனை
என்னவளாக நீ வந்து
எல்லாரையும் அன்பால் அனுசரித்து
ஏற்றமிகு வாழ்வு வாழவைத்தாய்
ஆனாலும்
ஏமாற்றம் இன்னும் நம்மை
ஏமாற்றவே செய்கிறது செல்லமே
என் பிறந்த நாள்
உன் பிறந்த நாள்
நம் திருமண நாள்
புத்தாண்டின் முதல் நாள்
என நமக்கான
முதல் ஆண்டின்
முக்கிய நாட்களில் - உன்
முகம் காண இயலாமல்
முன்னாளில் வாழ்ந்தது போல
இந்நாளிலும் வாழவேண்டிய நிர்பந்தம்
வலிகளை தாங்கி
வாழ பழகியவளே - உன்
வாழ்வின் துணைவனின்றி
வர இருக்கும்
இந்த பிறந்த நாளில்
நமது முருகனின் அருளோடு
வசந்தத்துடன் வாழ்ந்திட
பாசத்துடன் வாழ்த்துகிறேனடி


என் பிறந்த நாள்

மனதுக்கு பிடித்தவர்களுடன்
மனதுக்கு பிடித்தமாதிரி
மற்றவர்களின் வாழ்த்துகளோடு
மகிழ்ச்சியாய் சென்றன - என்
கடந்து போன பிறந்த நாள்கள்

மனதுக்கு பிடித்த
மனைவியுடன் - என்
முதல் பிறந்த நாள்
மூச்சின் அடிநாதம் வரை
அந்த நாளுக்காக தவமிருக்க
ஆரம்பித்தேன்!...

ஆயிரம் ஆயிரம் எதிர்பார்ப்புகள்
ஆவலை அதிகரிக்க - நவீன
அடிமை வாழ்க்கை வாழும்
அடியேனை அந்நிய தேசம்
அனுப்பியது விதி

உலகை அறிமுகபடுத்திய பெற்றோர் இல்லை
உடன் பிறந்தோரும் சுற்றமும் இல்லை
நல்லதொரு வாழ்வை பகிர்ந்து கொண்டிருக்கும் மனைவி இல்லை
நல்வழி படுத்திய நண்பர்கள் இல்லை


யாருமற்ற ஒரு தனி
யாத்ரிகனாய் முழு நாளும்
அலுவலகத்தில் தனிமையில்

அமைதியாய் கழிந்தது
என் பிறந்த நாள்

நான் வணங்கும் என் முருகனே
நாலு பேரு இல்லாமல்
நான் மட்டும் கொண்டாடும்
பிறந்த நாள் இனி வேண்டவே வேண்டாம்

மறக்கத்தான் நினைக்கிறேன்...

மாற்றத்தான் நினைக்கிறேன்
லட்டு போன்ற எண்ணங்கொண்ட
தினவெடுத்த தோள்களை உடையவளை!.....
மறக்கத்தான் நினைக்கிறேன்
லகானை நோக்கி செல்லும் குதிரையை போல
தினம் உன்னை நோக்கியே வரும் என் எண்ணங்களை!...
மாறத்தான் நினைக்கிறேன்
லத்தி சுழலும் இடத்தை
திரும்ப பார்க்கும் போதெல்லாம்!.....
மாறத்தான் நினைக்கிறேன்
லாவகமான வார்த்தைகளால்
திரும்பிய பக்கமெல்லாம்...
நேசத்தை நேசித்தவளை - தன்
சுவாசத்தை நேசிக்க மறந்தவளை
நான் யோசிக்காமலிருக்க!.. ஆயினும்
திரும்பிய திசையெங்கும் உன்னை ஞாபகபடுத்தும் செயல்களும்
லட்சோப லட்சம் மக்களை பாக்கும் போது துளிர்விடும் ஆசையையும்
மறக்க இயலவில்லையடி!..

காமன்வெல்த் இறுதி நிகழ்ச்சியில் கொலைகாரனுக்கு கௌரவமா?

மானமுள்ள தமிழா! உன்னை ஆளுவது ஒரு தமிழனா? நம் இனத்தை வேரறுத்தவனுக்கு சிவப்பு கம்பள வரவேற்ப்பா?
காமன்வெல்த் இறுதி நிகழ்ச்சியில் கொலைகாரனுக்கு கௌரவமா?
மத்திய அரசாங்கமா இல்லை எம் மானம் வித்து பிழைக்க விரும்பும் பிணந்தின்னி கூட்டமா?
உலக நாடுகளே, ஒரு இனத்தை அழித்த கொடுமைக்கு எந்த தண்டனையும் இல்லையா?
நாளை உங்கள் நாட்டுக்கு இது போல நடந்தாலும் இப்படிதான் அமைதியாக இருக்க போகின்றீர்களா
நமக்கு கொஞ்சமும் மானம் இல்லையா?
பதவிக்கும் பணத்துக்கும் இன்று நம் இன மானத்தை அடகு வைத்து நம்மை கவனிக்காதவர்கள் நாளை நம்மையும் கொன்று அல்லது விற்று விட எவ்வளவு நேரம் ஆகும்?
போராடினால் சிறைகளில் அடைப்பதால் எம் முன்னோர் தந்த வீரம் மழுங்காது,
மானங்கெட்ட எங்களை ஆளும் நபர்களுக்கு பின்னர் மனித நேயமுள்ள ஒருவன் வருவான் மானத்தோடும் அதே வீரத்தோடும் அன்று நீதி வெல்லும் எம் இனம் மீண்டும் தலை நிமிரும்.

தேவை மீண்டும் சுதந்திரம்

(நான் பணி புரியும் நிறுவனத்தில் வரும் சுதந்திர தினத்துக்காக நடக்க இருக்கும் "தேசப்பற்று" எனும் தலைப்பிலான கவிதை போட்டிக்கு அனுப்ப பட்ட என் கவிதை)
பகத்சிங்கும் பாரதியும்
நேதாஜியும் நேரும்
படேலும் திலகரும்
காந்தியும் கட்டபொம்மனும் - என
எங்கள் சுதந்திர காற்றுக்கு வித்திட்ட
எண்ணற்ற தலைவர்களே!..
எம் வாழ்வுக்ககாக
உம் வாழ்வை
அர்ப்பணித்து - ஆர்ப்பரித்து
அன்னியரை நம் மண்ணிலிருந்து
அகற்றிட நீங்கள் பட்ட
அல்லல்களை ஆழ்மனதில் சுமந்து - நீவிர்
கனவு கண்ட அமைதி - துணை
கண்டமாய் இந்தியாவை
காக்கின்றோம் - எம் கண்ணிமைபோல!..
ராணுவ வலிமை
அறிவியல் வலிமை
விஞ்ஞான வலிமை
உலக வெப்பமயமாதல் தடுப்பு - என
எங்களின் கனவு 2020 இல் இருந்தாலும்
இந்த அறுபத்து நான்காவது
சுதந்திர நாளில் - சிறு
ஏக்கத்தோடு உம்மை நினைக்கின்றோம்!...
ஆம்!..
புதிய பொருளாதாரக்கொள்கையால்
நம் நாட்டு சிறு வணிகம் பாதிக்கப்படுவதும்
தன் தாயக தண்ணீரில் அண்டை நாட்டினரால்
சுட்டு கொள்ளப்படும் இந்தியனையும்
தன் மண்ணுக்குள்ளேயே நக்சல்கள் என கூறி
சுடுகாடாக்கப்படும் இந்திய மண்ணையும் காத்திட
உம்மை போன்ற தலைவர்கள் இல்லையே
என்ற கவலையோடு!...
அந்நியனிடம் அடிமைப்பட்ட
காலம் கடந்து - நம்
நாட்டு புல்லுருவிகளிடமிருந்தும்
அந்நிய சக்திகளிடமிருந்தும் - நம்
பாரத தேசத்தை காத்திட
மீண்டும் பிறந்திட மாட்டீரா?

நினைவுகள்...

புத்தகத்தில் மயிலறகு வைத்தால்
குட்டி போடும் என - என்
சிறு வயதில் கேள்விபட்டேன்
அது உண்மையா என தெரியவில்லை
ஆனால் - உன்
நினைவுகளை என்
மனதினில் வைத்தேன் அது
பல்கி பல குட்டி போட்டு
இன்று என் மனமெல்லாம்
உன் நினைவுகள்
மட்டுமே நிரம்பியுள்ளது

தேவதைக்கான கனவு...

முகம் கொண்டு பாராமல் என்
மூச்சு காற்றின் கடிவாளத்தை
மூன்றாண்டுகள் கையில் வைத்திருந்தவளின்
முகம் காணும் ஒரு ஏக்கம்

என் உலகத்தை தலைகீழாய்
புரட்டி போட்டு
புது வடிவத்தில்
அதே உலகத்தை
கானசெய்தவளை
காணவேண்டுமென்ற துடிப்பு

என்னின் எண்ணங்களை
என்னையறியாமலே
எடுத்து சென்றவளின்
எண்ணங்களுடன்
என்னை இணைத்துகொள்ளும்
ஒரு முயற்சி

இவையனைத்தும் நனவானது
இவனின் தேவதைக்கான
நேற்றைய கனவில்...