நிராகரிப்பு..

ஒரு முறை உன்னுடன்
      உரையாடிட மாட்டேனா என
ஒவ்வொரு நாளும் தவித்து
      உறக்கம் மறந்திருந்தேன் - உயிரே!...

ஒரு முறை உந்தன்
      திருமுகம் கண்டிட மாட்டேனா என
ஒவ்வொரு கணமும் நான்
      தீயாக உருகியிருந்தேன் - அன்பே!...

நேசங்களை சுவாசித்தவளே  - உன்னையே
       சுவாசமாக சுவாசித்தவனை - உன்
நேச கரங்கொண்டு அரவணைக்காமல் 
       சுடும் மண்ணில் நிற்ப்பது போல
நெஞ்சம் வலிக்க என்னை
       நிராகரித்தது ஏனடி - கண்ணே!...  

அடிமை வாழ்வு

கடந்து கொண்டிருக்கும்
காலத்தில் துன்பப்பட்ட
எங்களின் குடும்பத்தையும்
உறவுகளையும் - ஒரு
கௌரவமான சூழலுக்கு
ஆட்படுத்த எங்களையே
நாங்கள் உணர்சிகளற்றவர்களாக
மாற்றி கொண்டாலும்...

படபடக்கும் டாலர் நோட்டுகளை
பார்க்கும் மாத இறுதிநாளில் - அதை
பார்க்கும் எங்களின் கண்களில் தென்படும்
பரவசத்தையும் தாண்டிய வெறுமையை
உங்களால் உணரமுடிகிறதா?

இந்த டாலர் தேசத்தில் நாங்கள்
இழந்து கொண்டிருப்பது என்னவென்று
தெரியுமா உங்களுக்கு?

ஐந்து வயதில்
அஆ  என  ஆசான் கற்றுதந்த
அறிவினை!...

ஐயிரண்டு வயதினில்
ஆசையோடு கற்க ஆரம்பித்த
அறுபத்துநான்கு கலைகளை!...

மூவாறு வயதில்
முகம் அறிந்த
மொத்த சுற்றமும் உறவுகளும்!...

மூவேழு வயதில் - எங்களின்
முகவரி காட்டி
துவண்டு போன நேரங்களில்
தோள் தூக்கிவிட்ட நட்பினை!...


நெருங்கி வந்து தடவி பார்த்து
பாசம் காட்டும் தாத்தா பாட்டி!...
பார்த்த நொடியில்
பரவசம் கொள்ளும் அன்னை!...
பார்வையிலே பெருமிதப்படும் தந்தை!...

அள்ளி அணைத்து
அன்பு காட்டும் அண்ணன்...
கால்களை கட்டி கொள்ளும்
அண்ணனின் கடைக்குட்டி...

எல்லாருக்கும் முன்னாள்
யாருக்கும் தெரியாமல்
ஒரு அன்பு பார்வையில் எங்களின்
வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும்
பாசத்துக்குரிய மனைவியின் நேசம்

பசியாற்ற தன் குழந்தைக்கு
பலகதை சொல்லி -
நிலா சோறு ஊட்டும்
பக்கத்து வீட்டு அக்கா...

தயிர் சாதம், மிளகாய் வத்தல்,
தாமரை  பூத்திருக்கும் குளக்கரை...
அந்தி அரட்டைக்கு ஆத்தங்கரை...
அரசியல் பேசும் பெரியவர்கள்...
அவர்களை சீண்டும் இளைஞர்கள்...
சித்திரையில் வரும் திருவிழாவா  - அல்லது  
சிட்டாக வரும் தாவணிகளின் விழாவா என
சிந்தை மயக்கும் ஒரு மாதகால விழா...

    
மழையின் மண்வாசனை;  மனதை
மயக்கும் நெல்லின் வாசனை..
பச்சை வயல்வெளிகள்... 
பறவைகளின் கூடுகள்...  


இப்படி நாங்கள்
சின்னதாகவும், பெரிதாகவும்
கிடைக்கவேண்டிய எவ்வளவோ
சந்தோசங்களை
எங்களின் வாழ்க்கையை
எங்களை வளர்த்த கலாச்சாரத்தை
நாங்கள் இழந்துகொண்டிருப்பது
வெறும் உயில்லாத ஒரு டாலர்
நோட்டுக்காக மட்டுமே!...



போராட்டம்....

நின்னோடு வாழ்தலே வரமென்று
வேண்டுதலோடு என் முருகனிடம்
தாரமாய் உன்னை கேட்டு
நித்தமும் தவமிருந்தேன் - என்
வேதமும் நீயென களிப்புற்றிருந்தேன்
தாமரையே!..
வழக்கம்போல விதி சதிசெய்ய உன்னை
முழுமையாக புரிந்த நான்
இறுதிவரை போராடியும் பயனற்று போனதேனம்மா?

அந்நிய தேச வாழ்வு...

அந்நிய தேசத்தில் ஒரு
அரைநாள் உன்னோடு வாழ்தலே
ஆயுளுக்கும் இன்பமென
நினைத்திருந்தேன் !...
ஆறு திங்கள் உன்னருகினில் வாழ
ஆண்டவன் தந்த வாய்ப்பினில்
அரை நாழிகை கூட
நீ - என்னை
அள்ளி அணைத்திட வாய்ப்பில்லாமல்
ஆளுக்கொரு திசையில் பயனிப்பதேனடி?...

கானல் நீர்!...

வார்த்தைகளில் விளையாடி- என்
எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த
தெரிந்த எனக்கு - உன்னிடம்
நேரில் பேச வார்த்தைகளின்றி
தவிக்கும் போது - நான்
வெயில் காலத்தில் தோன்றும்
கானல் நீரை போலவே
உன் வாழ்விலும் தோற்றமளித்தேனோ!....


முடிவுகள்...

இப்போதெல்லாம் அவன் தன்
இயல்பை மீறி முடிவெடுக்கிறான்....
திடிரென எடுக்கப்படும் முடிவுகள்
தீங்கிழைக்கும் என தெரியாமலேயே
எடுக்க படுகின்றன - இங்கு
எல்லோராலும் - அவன் மட்டும்
விதிவிலக்கல்லவே !...

நாழிரண்டு வருடமாய்
நகமும் சதையுமாய் இருந்தவன்
நாகரிகம் கருதி எடுத்த முடிவென
நாலுபேரிடம் சொல்லி பிரிந்தபோது
எத்தனை வலி தந்தது
என்பதை அறிவானா?

ஆறெட்டு மாதமாய் - அவனின்
ஆண்மையை அசைத்து பார்த்தவள்
அங்குலமங்குலமாய் அவனை ரசித்தவள்
அவளோடு வாழ்தலே சொர்க்கமென
அவனுக்கு உணர்த்தியவள்...
அவசரகதியில் எடுத்த முடிவு
ஆயுளுக்கும் வலிதந்ததை அறிவாளா?

எண்ணற்றவர்கள் இப்படி தான்
ஏதோ ஒரு காரணத்துக்காக
எதேச்சையாக எடுக்கும் முடிவுகள்
ஏதோ ஒரு எதிர்வினையை
ஏற்ப்படுத்தி சென்று விடுகின்றன
ஆனால்,
அது தரும் வலியும் வேதனையும் - நம்
ஆயுளின் உச்சமாய் இருப்பதை
அனுபவிக்க துவங்கும் நேரத்தில்
ஆளில்லா ஒரு தேசத்தில்
அன்னியப்பட்டு போனதை போல - உன்னையே
ஆச்சர்யமாய் நீ பார்க்க நேரிடும்
அப்போது நீ தோள் சாயகூட
ஆளில்லாமல் போக கூடும்!....

பருவம்...

கைகெட்டா நிலவை காட்டி
உணவருந்த வைத்தது
குழந்தை பருவம்
கைக்கெட்டும் உன்னை காட்டி
சாதிக்க வைத்தது - என்
இளமை பருவம் !..

என் கவிதைகள்....

துணை இல்லா சிட்டு குருவி போல
விடை தெரியா ஏக்கத்துடன்
என் கவிதைகள்!...

என் மனது

எதை தேடி
இந்த அலைகள்
ஒவ்வொரு முறையும்
கரைக்கு வருகிறதோ
அதே போல
விடை அறியாமல்
உன்னை தேடியே
வருகிறது - என் மனது

வாழும் வரம்

ஊருக்கு வெளியில்
ஒருவரும் இல்லா தேசத்தில்
உன் மடியில் தலை வைத்து
இந்த உலகை ரசிக்காமல் போவேனா
இல்லை - செல்லமே ...
உன்னோடு வாழும் வரம்
வாழ்வெல்லாம் கிடைக்குமா?

காதல்..

நீ என்னருகில் இல்லா நேரங்களில்
நினைவுகளில் நீந்தி மெல்ல கொள்கிறாய்
நேரில் பார்க்கும் போது - ஏனோ
நெஞ்சில் இருப்பதை சொல்ல மறுக்கிறாய்
கனவுகளில் தினம் கண்ணாமூச்சி
காட்டுகிறாய் - என் காதலை சொன்னால்
காதுகளை மூடி கொள்கிறாய் -
என் காதலியே!...
நம் காதலை கரை சேர்ப்பாயா?

பூஜை...

இறைவனின் பூஜைக்கு வந்த
அர்ச்சனை பூவே
காலையில் - நீ
கலையாய் - கவியாய்;
மாலையில் - நீ
தீயாய் - தீபமாய்;
சங்கீதம் ஒலிக்க
மத்தளம் இசைக்க
மோகனமாய் நாட்டியம்
அரங்கேற...
வேதமாய் - நிவேதமாய்
புதினமாய் - புவனமாய்
மங்கைகள் குலவையிட
ஆண்டாள் அருள்வேண்டி
லாவகமாக ஊர்கூடி இழுக்க
சத்தியமாய் சொல்கிறேன்
ரம்பையும் ஊர்வசியும் போல
அசைந்தாடி வருகிறது
ஐயாறு அடி
அய்யனாரு தேரு....

காதலே உன்னை ஆராதிக்கிறேன்....

அன்பே!.. அழகோவியமே!..
ஆராதிக்க வேண்டியவள் அல்லவா நீ!...
அழகு பதுமையே
ஆர்பரிக்கும் அழகுடையவளே
ஆண்டவன் உன்னை எனக்கு
ஆண்டு சில கடந்த பின்
அறிமுகப்படுத்தியதின் நோக்கம் என்னடி?
வளைந்த வில்போன்ற புருவமும்
கருணை நிறைந்த கண்களும்
செதுக்கிய அளவான மூக்கும்
ரவிவர்மனின் தூரிகையில்
வரையப்பட்ட தோற்றத்தை உடைய
உன் செவ்விதழ்களும்...
காதணிக்கு அழகு சேர்க்கும் காது மடல்களும்
பிஞ்சு வெண்டைக்காய் விரல்களும்
சங்கு கழுத்தும்..........
என எல்லா
எண்ணமுமாக இருந்தும் - நீ
என்னவளாக மாறாமல்
போனதேனடி?.....

என்னவளின் பிறந்த நாள்

24-Jan அன்று பிறந்த நாள் கொண்டாடும் எனது அன்பு மனைவி மோகனாவிற்கு..... ..

ஏமாற்றமே வாழ்வு என்றிந்தவனை
என்னவளாக நீ வந்து
எல்லாரையும் அன்பால் அனுசரித்து
ஏற்றமிகு வாழ்வு வாழவைத்தாய்
ஆனாலும்
ஏமாற்றம் இன்னும் நம்மை
ஏமாற்றவே செய்கிறது செல்லமே
என் பிறந்த நாள்
உன் பிறந்த நாள்
நம் திருமண நாள்
புத்தாண்டின் முதல் நாள்
என நமக்கான
முதல் ஆண்டின்
முக்கிய நாட்களில் - உன்
முகம் காண இயலாமல்
முன்னாளில் வாழ்ந்தது போல
இந்நாளிலும் வாழவேண்டிய நிர்பந்தம்
வலிகளை தாங்கி
வாழ பழகியவளே - உன்
வாழ்வின் துணைவனின்றி
வர இருக்கும்
இந்த பிறந்த நாளில்
நமது முருகனின் அருளோடு
வசந்தத்துடன் வாழ்ந்திட
பாசத்துடன் வாழ்த்துகிறேனடி


என் பிறந்த நாள்

மனதுக்கு பிடித்தவர்களுடன்
மனதுக்கு பிடித்தமாதிரி
மற்றவர்களின் வாழ்த்துகளோடு
மகிழ்ச்சியாய் சென்றன - என்
கடந்து போன பிறந்த நாள்கள்

மனதுக்கு பிடித்த
மனைவியுடன் - என்
முதல் பிறந்த நாள்
மூச்சின் அடிநாதம் வரை
அந்த நாளுக்காக தவமிருக்க
ஆரம்பித்தேன்!...

ஆயிரம் ஆயிரம் எதிர்பார்ப்புகள்
ஆவலை அதிகரிக்க - நவீன
அடிமை வாழ்க்கை வாழும்
அடியேனை அந்நிய தேசம்
அனுப்பியது விதி

உலகை அறிமுகபடுத்திய பெற்றோர் இல்லை
உடன் பிறந்தோரும் சுற்றமும் இல்லை
நல்லதொரு வாழ்வை பகிர்ந்து கொண்டிருக்கும் மனைவி இல்லை
நல்வழி படுத்திய நண்பர்கள் இல்லை


யாருமற்ற ஒரு தனி
யாத்ரிகனாய் முழு நாளும்
அலுவலகத்தில் தனிமையில்

அமைதியாய் கழிந்தது
என் பிறந்த நாள்

நான் வணங்கும் என் முருகனே
நாலு பேரு இல்லாமல்
நான் மட்டும் கொண்டாடும்
பிறந்த நாள் இனி வேண்டவே வேண்டாம்

மறக்கத்தான் நினைக்கிறேன்...

மாற்றத்தான் நினைக்கிறேன்
லட்டு போன்ற எண்ணங்கொண்ட
தினவெடுத்த தோள்களை உடையவளை!.....
மறக்கத்தான் நினைக்கிறேன்
லகானை நோக்கி செல்லும் குதிரையை போல
தினம் உன்னை நோக்கியே வரும் என் எண்ணங்களை!...
மாறத்தான் நினைக்கிறேன்
லத்தி சுழலும் இடத்தை
திரும்ப பார்க்கும் போதெல்லாம்!.....
மாறத்தான் நினைக்கிறேன்
லாவகமான வார்த்தைகளால்
திரும்பிய பக்கமெல்லாம்...
நேசத்தை நேசித்தவளை - தன்
சுவாசத்தை நேசிக்க மறந்தவளை
நான் யோசிக்காமலிருக்க!.. ஆயினும்
திரும்பிய திசையெங்கும் உன்னை ஞாபகபடுத்தும் செயல்களும்
லட்சோப லட்சம் மக்களை பாக்கும் போது துளிர்விடும் ஆசையையும்
மறக்க இயலவில்லையடி!..

காமன்வெல்த் இறுதி நிகழ்ச்சியில் கொலைகாரனுக்கு கௌரவமா?

மானமுள்ள தமிழா! உன்னை ஆளுவது ஒரு தமிழனா? நம் இனத்தை வேரறுத்தவனுக்கு சிவப்பு கம்பள வரவேற்ப்பா?
காமன்வெல்த் இறுதி நிகழ்ச்சியில் கொலைகாரனுக்கு கௌரவமா?
மத்திய அரசாங்கமா இல்லை எம் மானம் வித்து பிழைக்க விரும்பும் பிணந்தின்னி கூட்டமா?
உலக நாடுகளே, ஒரு இனத்தை அழித்த கொடுமைக்கு எந்த தண்டனையும் இல்லையா?
நாளை உங்கள் நாட்டுக்கு இது போல நடந்தாலும் இப்படிதான் அமைதியாக இருக்க போகின்றீர்களா
நமக்கு கொஞ்சமும் மானம் இல்லையா?
பதவிக்கும் பணத்துக்கும் இன்று நம் இன மானத்தை அடகு வைத்து நம்மை கவனிக்காதவர்கள் நாளை நம்மையும் கொன்று அல்லது விற்று விட எவ்வளவு நேரம் ஆகும்?
போராடினால் சிறைகளில் அடைப்பதால் எம் முன்னோர் தந்த வீரம் மழுங்காது,
மானங்கெட்ட எங்களை ஆளும் நபர்களுக்கு பின்னர் மனித நேயமுள்ள ஒருவன் வருவான் மானத்தோடும் அதே வீரத்தோடும் அன்று நீதி வெல்லும் எம் இனம் மீண்டும் தலை நிமிரும்.

தேவை மீண்டும் சுதந்திரம்

(நான் பணி புரியும் நிறுவனத்தில் வரும் சுதந்திர தினத்துக்காக நடக்க இருக்கும் "தேசப்பற்று" எனும் தலைப்பிலான கவிதை போட்டிக்கு அனுப்ப பட்ட என் கவிதை)
பகத்சிங்கும் பாரதியும்
நேதாஜியும் நேரும்
படேலும் திலகரும்
காந்தியும் கட்டபொம்மனும் - என
எங்கள் சுதந்திர காற்றுக்கு வித்திட்ட
எண்ணற்ற தலைவர்களே!..
எம் வாழ்வுக்ககாக
உம் வாழ்வை
அர்ப்பணித்து - ஆர்ப்பரித்து
அன்னியரை நம் மண்ணிலிருந்து
அகற்றிட நீங்கள் பட்ட
அல்லல்களை ஆழ்மனதில் சுமந்து - நீவிர்
கனவு கண்ட அமைதி - துணை
கண்டமாய் இந்தியாவை
காக்கின்றோம் - எம் கண்ணிமைபோல!..
ராணுவ வலிமை
அறிவியல் வலிமை
விஞ்ஞான வலிமை
உலக வெப்பமயமாதல் தடுப்பு - என
எங்களின் கனவு 2020 இல் இருந்தாலும்
இந்த அறுபத்து நான்காவது
சுதந்திர நாளில் - சிறு
ஏக்கத்தோடு உம்மை நினைக்கின்றோம்!...
ஆம்!..
புதிய பொருளாதாரக்கொள்கையால்
நம் நாட்டு சிறு வணிகம் பாதிக்கப்படுவதும்
தன் தாயக தண்ணீரில் அண்டை நாட்டினரால்
சுட்டு கொள்ளப்படும் இந்தியனையும்
தன் மண்ணுக்குள்ளேயே நக்சல்கள் என கூறி
சுடுகாடாக்கப்படும் இந்திய மண்ணையும் காத்திட
உம்மை போன்ற தலைவர்கள் இல்லையே
என்ற கவலையோடு!...
அந்நியனிடம் அடிமைப்பட்ட
காலம் கடந்து - நம்
நாட்டு புல்லுருவிகளிடமிருந்தும்
அந்நிய சக்திகளிடமிருந்தும் - நம்
பாரத தேசத்தை காத்திட
மீண்டும் பிறந்திட மாட்டீரா?

நினைவுகள்...

புத்தகத்தில் மயிலறகு வைத்தால்
குட்டி போடும் என - என்
சிறு வயதில் கேள்விபட்டேன்
அது உண்மையா என தெரியவில்லை
ஆனால் - உன்
நினைவுகளை என்
மனதினில் வைத்தேன் அது
பல்கி பல குட்டி போட்டு
இன்று என் மனமெல்லாம்
உன் நினைவுகள்
மட்டுமே நிரம்பியுள்ளது

தேவதைக்கான கனவு...

முகம் கொண்டு பாராமல் என்
மூச்சு காற்றின் கடிவாளத்தை
மூன்றாண்டுகள் கையில் வைத்திருந்தவளின்
முகம் காணும் ஒரு ஏக்கம்

என் உலகத்தை தலைகீழாய்
புரட்டி போட்டு
புது வடிவத்தில்
அதே உலகத்தை
கானசெய்தவளை
காணவேண்டுமென்ற துடிப்பு

என்னின் எண்ணங்களை
என்னையறியாமலே
எடுத்து சென்றவளின்
எண்ணங்களுடன்
என்னை இணைத்துகொள்ளும்
ஒரு முயற்சி

இவையனைத்தும் நனவானது
இவனின் தேவதைக்கான
நேற்றைய கனவில்...